பாரீஸ் ஹோட்டலில் தங்கியிருந்த லயோனல் மெஸ்ஸியிடம் கொள்ளை: ஆயிரக்கணக்கில் யூரோ, நகைகள் திருட்டு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸியிடம் ஆயிரக்கணக்கான யூரோக்கள், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த புதன்கிழமை இந்த கொள்ளைச்சம்பவம் நடந்துள்ளது இப்போதுதான் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
பாரீஸ் நகரில் உள்ள லி ராயல் மொனிசா எனும் ஹோட்டலில் மெஸ்ஸி உள்ளிட்ட ஏராளமான பயணிகள் தங்கியிருந்தனர். கடந்த புதன்கிழமை இரவு ஹோட்டலின் பால்கணிப்பகுதி வழியாக நுழைந்த கொள்ளையர்கள், மெஸ்ஸி தங்கியிருந்த அறைக்குள் புகுந்தனர். ஹோட்டல் அறையில் மெஸ்ஸி, அவரி்ன் மனைவி வைத்திருந்த ஆயிரக்கணக்கான யூரோ, பவுண்ட் பணம், நகைகளை கொள்ளையடித்து திருடர்கள் தப்பியுள்ளனர்.
மெஸ்ஸி அறை மட்டுமல்லாமது, அந்த ஹோட்டலில் தங்கியிருந்த பலரின் உடைமைகள், நகைகள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கூறுகையில் “நான் என் அறையில் ஏராளமான பவுண்ட்கள், பணம், நகைகள் வைத்திருந்தேன். வெளியே சென்றுவிட்டு திரும்பிவந்து பார்க்கையில் அனைத்தும் மாயமாகி இருந்தன. குறிப்பாக என் காதுதோடு, வளையம், நகைகள் அனைத்தையும் காணவில்லை” எனத் தெரிவித்தார்.
தி சன் நாளேடு வெளியிட்ட செய்தியில், “பாரீஸ் நகரி்ல் உல்ள லீ ராயல் மொனிசா ஹோட்டலில் தங்கியிருந்த கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி உள்ளிட்ட 4 பேரின் அறைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் ஏராளமான நகைகள், பணம் பறிபோயுள்ளது.
இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தை ஆய்வுசெய்து, பாதுகாப்பு குறைபாடுகளால் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிவித்தனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் சாதாரணமான கொள்ளையர்களால் நடத்தப்பட்டிருக்க முடியாது, மிகவும் கை தேர்ந்த கொள்ளையர்களால் கொள்ளை நடந்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த ஹோட்டலில்தான் லயோனல் மெஸ்ஸி, அவரின் மனைவி அன்டோனல்லா ரோகுஜோ, குழந்தைகள் மூவர் ஆகியோர் தங்கியுள்ளனர். பார்சிலோனா அணிக்காக ஆடிய மெஸ்ஸி சமீபத்தில் பிஎஸ்ஜி அணிக்காக மாறினார். அப்போதிருந்த இந்த ஹோட்டலில்தான் மெஸ்ஸியும் அவரின் குடும்பத்தாரும் தங்கியுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் மெஸ்ஸியைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் ஹோட்டலின் முன் குவிந்திருப்பார்கள். அவர்களைக் காண பால்கணி வழியாகவே சென்று மெஸ்ஸி சந்திப்பார். இந்த பால்கணி வழியாகவே தற்போது கொள்ளையர்கள் வந்து கொள்ளையடித்துள்ளனர்.
#AJ ABDH