இங்கிலாந்தின் கௌண்டி அணியுடன் இணையும் திமுத்!

இங்கிலாந்து கௌண்டி அணியான யோர்க்ஷையர் கிரிக்கெட் கழகம் இலங்கை அணியின் தலைவரும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திமுத் கருணாரத்னவை நடைபெறவுள்ள கௌண்டி சம்பியன்ஷிப்புக்காக ஒப்பந்தம் செய்துள்ளது.

 

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடருக்கு முன்னர், திமுத் கருணாரத்ன 4 முதற்தர போட்டிகளில் விளையாடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

எவ்வாறாயினும் தேசிய அணியின் பொறுப்புகள் நிறைவுபெற்ற பின்னர் திமுத் கருணாரத்ன மீண்டும் யோர்க்ஷையர் அணியுடன் இணைந்துக்கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

திமுத் கருணாரத்ன கடந்ம 15 மாதங்களாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். இவர் குறித்த காலப்பகுதியில் 9 போட்டிகளில் விளையாடி 62.82 என்ற ஓட்ட சராசரியில் 1068 ஓட்டங்களை குவித்துள்ளார்.

 

திமுத் கருணாரத்ன இந்த பருவகால கௌண்டி கிரிக்கெட்டில் இணையும் இரண்டாவது இலங்கை வீரராக இடம்பெற்றுள்ளார். ஏற்கனவே ஓய்வுபெற்ற சுரங்க லக்மால் டெர்பிஷையர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.