இந்தியாவை காப்பாற்றியது பாகிஸ்தான், உலகக் கிண்ணத்தின் அரையிறுதி வாய்ப்பை அதிகரித்த முதல் அணியானது..!
ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் இன்று ஷார்ஜாவில் இடம்பெற்ற பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து அரை இறுதிக்கான வாய்ப்பை இன்று அதிகரித்துக் கொண்டது.
உலகக் கிண்ணப் போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்வதிலிருந்து பாதுகாப்பு காரணங்களை காட்டி ஒதுங்கியிருந்தது, இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல் பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய அதிருப்தி நிலை உருவானது.
இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக ஐசிசி T20 உலகக்கிண்ண போட்டிகளில் நியூசிலாந்து அணியை, பாகிஸ்தான் தோற்கடித்து தங்கள் பலத்தை நிரூபித்திருக்கிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியின் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஹாரிஸ் ரவூப் 4 விக்கெட்டுகளை 22 ஓட்டங்களுக்கு கைப்பற்றினார் .
135 எனும் இலகுவான இலக்கோடு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு கடந்த போட்டியை போன்று துடுப்பாட்டம் கைகொடுக்கவில்லை.
28 ஓட்டங்கள் முதல் விக்கெட்டுக்காக பகிரப்பட்டது, ஆனாலும் கூட அதன் பின்னர் விக்கட்டுக்கள் சரிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் தடுமாறியது, ஆனாலும் 22 பந்துகளில் 46 ஓட்டங்களை வீழ்த்தப்படாத 6-வது விக்கெட்டுக்காக பகிர்ந்த ஆசிப் அலி மற்றும் சொயிப் மாலிக் ஆகியர் பாகிஸ்தானுக்கான வெற்றியை உறுதிப்படுத்தினர்.
இந்த வெற்றி மூலமாக பாகிஸ்தான் அணி, இந்தியாவை தொடர்ந்து நியூசிலாந்து அணியையும் தோற்கடித்து இந்த குழுவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
பாகிஸ்தான் அணி அடுத்துவரும் ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், நபியா, மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுடனான போட்டிகளில் ஏதாவது ஒன்றை வென்றாலே அரை இறுதிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தி விடும் என்பதும் குறிப்பிடதக்கது.
இன்றைய பாகிஸ்தானின் வெற்றி இந்திய அணிக்கான அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்கவைக்க உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது, சில வேளைகளில் இன்று நியூஸிலாந்து வெற்றி பெற்றிருக்குமாக இருந்தால் இந்தியா அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்புக்காக போராட வேண்டி வந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.