கம்பீர் சொன்னால் தான் கேப்டன் பதவி.. பல்டி அடித்த பிசிசிஐ.. சிக்கலில் ரோஹித் சர்மா.. என்ன நடந்தது?
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது ரோஹித் சர்மாவே இந்திய அணியின் கேப்டனாக இருப்பார் என சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி இருந்தன.
பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து அந்த செய்திகள் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இதில் ஒரு சிக்கல் இருப்பதையும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தான் இனி பெரும்பாலான முடிவுகளை எடுப்பார்.
நிச்சயமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் அணிக்கு யார் கேப்டனாக இருப்பது? என்பதில் கௌதம் கம்பீரின் வார்த்தைக்கு அதிக மதிப்பு அளிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார். கடைசியாக இந்திய டெஸ்ட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் படுமோசமான தோல்விகளை சந்தித்து இருந்தது.
மொத்தம் எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து இருந்தது. மேலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியின் போது ரோஹித் சர்மா அணியில் இருந்து தாமாகவே விலகிவிட்டார். ஆனால், அதிகாரப்பூர்வமாக அவர் தான் இன்னும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கிறார். மேலும் அவர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட விருப்பமில்லை எனவும் தெரிவிக்கவில்லை.
அந்த வகையில் பார்த்தால் ரோஹித் சர்மா தொடர்ந்து டெஸ்ட் அணியில் இடம் பெற விரும்புகிறார் என எடுத்துக் கொள்ளலாம். அவரது ஒரு நாள் போட்டி ஆட்டம் சமீபத்தில் நன்றாக இருந்தது. ஆனால், டெஸ்ட் போட்டியின் பேட்டிங் படுமோசமாகவே இருந்தது. அந்த வகையில் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் அளிக்கப்படுமா? என்ற ஒரு கேள்வியும் உள்ளது.
ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கும் முன்பு நிச்சயம் கௌதம் கம்பீரிடம் ஆலோசனை நடத்திய பின்னரே பிசிசிஐ அந்த முடிவை எடுக்கும் என அந்த அதிகாரி சுட்டிக்காட்டி உள்ளார். ஏனெனில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணி மூன்று முக்கிய ஐசிசி தொடர்களில் பங்கேற்க உள்ளது.
அந்த இரண்டு ஆண்டுகள் முழுவதும் ரோஹித் சர்மாவால் விளையாட முடியுமா? என்பது நிச்சயமற்ற ஒரு விஷயம். எனவே, அவரை நம்பி மட்டும் இனி முடிவுகளை எடுக்க முடியாது. மாறாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அந்த இரண்டு ஆண்டுகளுக்கும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறார். எனவே, அவரது முடிவுக்கு தான் இங்கே இனி அதிகம் மதிப்பளிக்கப்படும் என அவர் சுட்டிக் காட்டினார். எனவே ரோஹித் சர்மாவின் டெஸ்ட் அணி கேப்டன்சி மற்றும் டெஸ்ட் அணி வாய்ப்பு கௌதம் கம்பீரின் கைகளில் தான் இருக்கிறது.