*கொழும்பு ஊடகவியலாளர் சங்க கிரிக்கெட் போட்டித் தொடரில் சாம்பியன் ஆனது கொழும்பு ரோயல் அணி*

*கொழும்பு ஊடகவியலாளர் சங்க கிரிக்கெட் போட்டித் தொடரில் சாம்பியன் ஆனது கொழும்பு ரோயல் அணி*

கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் நடாத்தப்படும் வருடாந்த சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி இரண்டாவது தடவையாகவும் “கோட்டே அங்கம்பிட்டிய” மைதானத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இந்த கிரிக்கட் போட்டியில் கொழும்பு ஊடகவியலாளர்கள் சங்கத்தின் அங்கத்தவர்கள் அடங்கிய 8 அணிகள் போட்டியிட்டன.

8 அணிகளுக்கு இடையிலான ஆரம்ப சுற்று மற்றும் அரையிறுதிப் போட்டிகளின் பின்னர் கொழும்பு கிங்ஸ் அணியும் கொழும்பு ரோயல் அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியை வீழ்த்தி கொழும்பு றோயல் அணி சம்பியன் பட்டத்தை வென்றது.

சிறந்த துடுப்பாட்ட வீரராக கொழும்பு ரைடர் அணியின் பிரதீப் விக்ரமசிங்கவும் சிறந்த பந்து வீச்சாளராக கொழும்பு ரோயல் அணியின் அமல் கால்லகேயும் கிண்ணத்தை வென்றனர்.

போட்டித் தொடரின் சிறந்த வீரராக கொழும்பு ரோயல் அணியின் லங்கா டி ஜெயவர்த்தனே தெரிவானார்.

காலை 7.30 மணிக்கு ஆரம்பமான இப்போட்டி நாள் முழுவதும் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் சிறப்பதிதிகளாக
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ, அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள்
உட்பட பெருந்திரளான மக்களின் பங்குபற்றலுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டித் தொடரில் எமது விளையாட்டு செய்தியாசிரியர் சந்திரகாசன் ஞான பிரசாந்தன், சாம்பியனான கொழும்பு ரோயல் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.