“சிஎஸ்கே அணியில் 70 சதவீத வீரர்கள் நீக்கப்படுவார்கள்.. 2026 ஐபிஎல்-இல்..” உண்மையை உடைத்த ரெய்னா

“சிஎஸ்கே அணியில் 70 சதவீத வீரர்கள் நீக்கப்படுவார்கள்.. 2026 ஐபிஎல்-இல்..” உண்மையை உடைத்த ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது இடம்பெற்றுள்ள வீரர்களில் 70 சதவீத வீரர்கள் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இடம் பெற மாட்டார்கள், அவர்கள் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, மதீஷா பதிரானா, ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி ஆகிய ஐந்து வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். மற்ற வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர். ரவிச்சந்திரன் அஸ்வின், ரச்சின் ரவீந்திரா, டேவோன் கான்வே போன்ற முன்னாள் சிஎஸ்கே வீரர்களை அந்த அணி வாங்கியிருந்தது.

அவர்களை தவிர்த்து பல புதிய வீரர்களையும் சிஎஸ்கே அணி வாங்கியது. ஆனால் தக்க வைக்கப்பட்ட வீரர்களும், முன்னாள் சிஎஸ்கே வீரர்களும், புதிதாக வாங்கப்பட்ட வீரர்களும் என அனைத்து தரப்பிலும் யாரும் 2025 ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை.

இந்த நிலையில்தான் சுரேஷ் ரெய்னா, தற்போது உள்ள அணியிலிருந்து 70 சதவீத வீரர்கள் நீக்கப்படுவார்கள் என கூறியுள்ளார். தற்போது சிஎஸ்கே அணியில் டாப் ஆர்டர் சரியாக விளையாடவில்லை என்பது தான் பெரிய சிக்கலாக உள்ளது. அடுத்த ஆண்டு நிச்சயம் ரச்சின் ரவீந்திரா, டேவோன் கான்வே ஆகியோர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஆண்டு இடம் பெற்றுள்ள வீரர்களில் 70 சதவீத வீரர்கள் அடுத்த ஆண்டு விளையாட மாட்டார்கள். பேட்ஸ்மேன்களும் பந்துவீச்சாளர்களும் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் ஒன்றுமே செய்யவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுபோல விளையாடி இதுவரை நான் பார்த்ததே இல்லை” என்று சுரேஷ் ரெய்னா தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.”

மேலும், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமான ஏலத்தை எதிர்கொண்டுள்ளது. சரியான வீரர்களை அந்த அணி வாங்கவில்லை. இந்த ஆண்டு அந்த அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அணிக்காக எதுவுமே செய்யவில்லை. நிறைய பதில்களை அவர்கள் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார் சுரேஷ் ரெய்னா.

Previous articleஐபிஎல் வரலாற்றில் முகமது ஷமி நிகழ்த்திய மாபெரும் பவுலிங் சாதனை.. முதல் பந்தில் 4 முறை விக்கெட்
Next article7வது தோல்வியை பெற்ற சிஎஸ்கே.. இன்னும் பிளே ஆப்க்கு போக வாய்ப்பு இருக்கு.. எப்படி தெரியுமா?