சுகததாச அரங்கில் பதக்கம் வென்ற திருமலை சல்லி அம்பாள் வித்தியாலய வீராங்கனை..!
திருகோணமலை மாணவி சுகததாச மைதானத்தில் நடைபெற்ற தேசியநிலை கனிஷ்ட தடகளப்போட்டியில் இரண்டாம் இடத்தைப்பெற்றுப் பெருமை சேர்த்துள்ளார்.
திருகோணமலை மாவட்டம், சல்லிப் பகுதியில் அமைந்துள்ள சல்லி அம்பாள் மகாவித்தியாலய மாணவியான அருட்செல்வன் பிரதீஷா என்பவர் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 3000m Steeplechase போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். குறித்த தேசிய மட்டப்போட்டியில் சல்லிஅம்பாள் மகாவித்தியாலயத்தில் இருந்து முதன் முதலில் இருவர் கலந்துகொண்டதுடன் வெற்றியையும் பெற்றது பாடசாலைக்கும் அப்பிரதேசத்திற்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளது.
![](https://vilaiyaddu.com/wp-content/uploads/2022/06/67830752-2DBE-4DA6-9A99-90565773184A.jpeg)
குறித்த தடகளப்போட்டிக்கான பயிற்சியைப் பெறும் மைதானம் மற்றும் உபகரணங்கள் அப்பாடசாலையில் இல்லை என்பதுடன் அண்மையில் உள்ள திருகோணமலை நகரத்திலும் இல்லை என்பது கவனத்தில்கொள்ளவேண்டியது.
அண்மைக்காலமாக சல்லிஅம்பாள் மகாவித்தியாலய மாணவர்கள் பல விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றுவதும், வெற்றிபெறுவதும் அதிகரித்துள்ளமையினை அவதானிக்க்கூடியதாக உள்ளது. இந்த மாற்றத்திற்குக்காரணம் அண்மைக்காலத்தில் நியமிக்கப்பட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் திரு.சந்துரு வரதராசன் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://vilaiyaddu.com/wp-content/uploads/2022/06/5B87F510-9E8A-47E2-A76C-A5CF4915C2B2.jpeg)
எமது பிரதேசத்தில் உள்ள மாணவர்கள் பல்திறமையினைக்கொண்டவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிவழங்கப்படும்போது நிச்சயம் வெற்றிபெறுவார்கள்.
இதற்கு சல்லி அம்மாள் மாணவி, கிளிநொச்சி மாணவி ஆகியோர் சமகாலத்தில் சொல்லக்கூடிய சிறந்தஉதாரணங்கள். இந்த வெற்றிகளுக்கு ஒத்துழைத்த பயிற்றுவிப்பாளர் சந்துரு , பாடசாலை சமூகம், பெற்றோர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
நன்றி -ராவணமுரசு
![](https://vilaiyaddu.com/wp-content/uploads/2022/06/1A15D462-50F1-4BD1-B719-939B8A233275.jpeg)