?வாழ்த்துக்கள் ?
செஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரை தோற்கடித்த 16 வயது தமிழர் பிரக்யானந்தா
சர்வதேச அளவில் நடைபெற்று வரும் ஏர்திங் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுவர் பிரக்யானந்தா வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சர்வதேச செஸ் வீரர்கள் பங்கேற்கும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ்போட்டிகள் ஆன்லைன் முறையில் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா தரப்பில் கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த 16 வயது பிரக்யானந்தா பங்கேற்றுள்ளார்.
ஏர்திங்ஸ் தொடரில் ஆர்மேனிய வீரர் லெவோன் ஆரோனியனுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிரக்யானந்தா, 2 போட்டிகளை டிரா செய்தார். மற்ற போட்டிகள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் கருப்பு காய்களை தேர்வு செய்து பிரக்யானந்தா விளையாடினார்
ஆட்டத்தின் 39வது நகர்வின்போது, மேக்னஸ் கார்ல்சன் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரரை, சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவர் தோற்கடித்திருப்பது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
What a wonderful feeling it must be for Pragg. All of 16, and to have beaten the experienced & decorated Magnus Carlsen, and that too while playing black, is magical!
Best wishes on a long & successful chess career ahead. You’ve made India proud! pic.twitter.com/hTQiwznJvX
— Sachin Tendulkar (@sachin_rt) February 21, 2022
இதுதொடர்பாக டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என்ன ஒர் அற்புதமான உணர்வு. அனுபவம் வாய்ந்த, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை கறுப்பு காய்களுடன் விளையாடி தோற்கடித்தது மாயாஜாலம். மேன்மேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். இந்தியாவுக்கு நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.