டி20 உலகக்கோப்பை: இந்தியாவின் கனவை தகர்த்தது நியூசிலாந்து

டி20 உலகக்கோப்பை: இந்தியாவின் கனவை தகர்த்தது நியூசிலாந்து

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி எதிரணி பந்துவீச்சு தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை மட்டுமே எடுத்தது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணி தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், இஷ் சோது 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய பேட்டிங்கை நிர்மூலப்படுத்தினர்.

இதையடுத்து எளிய இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணி தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் – டெரில் மிட்செல் இணை அதிரடியாக விளையாடினார். இதில் கப்தில் 20 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் டெரில் மிட்செலுடன் ஜோடி சேர்ந்த கேன் வில்லியம்சன்னும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் டெரில் மிட்செல் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார்.

தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெரில் மிட்செல் 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இருப்பினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதன் மூலம் நியூசிலாந்து அணி 14.3 ஓவர்களில் இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேன் வில்லியம்சன் 33 ரன்களை சேர்த்திருந்தார்.

இத்தோல்வியின் மூலம் இந்திய அணி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ளது ரசிகர்களை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

#ABDH