டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை நோக்கி இந்தியா- முதல் நாளில் ஆதிக்கம்..!

இந்திய, மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4 வதும் இறுதியான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் சகல விக்கெட்களையும் பறித்த இந்திய அணி, இன்றைய நாள் நிறைவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 24 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடும் வாய்ப்பை பெற்றது.

இந்திய அணி சார்பில் பூம்ராவுக்கு பதிலாக சிராஜ் வாய்ப்பு பெற்றார், இங்கிலாந்து அணி சார்பில் லோரன்ஸ் மற்றும் டோம் பெஸ் ஆகியோர் அணியில் இடம்பெற்றனர், ஆனால் ஒரேயொரு பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் மட்டுமே அணியில் இடம்பிடித்தார்.

முதல் இன்னிங்க்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 205 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.
பென் ஸ்டோக்ஸ் 55 , லோரன்ஸ் 46 , ஜோ ரூட் 5 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.

பந்து வீச்சில் அக்சர் பட்டேல் 4 , அஷ்வின் 3 , சிராஜ் 2 , வோஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு ஆடிய இந்திய அணி இன்றைய நாள் நிறைவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 24 ஓட்டங்களை பெற்றது, சுப்மான் கில் மீண்டும் ஏமாற்றினார், இன்றும் முதல் ஓவரிலேயே ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்தார்.

இதன்முலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை நோக்கி இந்தியா வலுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றது, இந்த போட்டியில் தோல்வியை தவிர்த்தாலே இந்தியா, நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை போட்டியின் 2ம் நாள் ஆட்டம் தொடரும்.