ட்ரெண்ட் போல்ட் டெல்லி அணியிலிருந்து மும்பைக்கு மாற்றியது சரியாகுமா ?

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியிலிருந்து மாற்றலாகி இப்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2020 IPL ல் ஜொலித்துக் கொண்டிருக்கின்றார்.
சில நேரங்களில் சிலரால் எடுக்கப்படும் முடிவுகள் பலரால் விமர்சிக்கப்படுவனவாகவும், பலகாலத்துக்கு பாதிப்பை தோற்றுவிக்கவல்லனவாகமும் அமைந்து விடுகின்றன.
அதில் ஒன்றுதான் ட்ரெண்ட் போல்ட்டின் சம்பவம்.
இந்த மாதிரியிலான மடமையான முடிவுகளை எடுத்து மாட்டித்தவித்த முதல் அணியாக கோஹ்லி தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி காணப்படுகின்றது.
ஒவ்வொரு சீசனுக்கு பிறகும் அவர்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கவனிக்காது பல வீரர்களை கழற்றி விடுவார்கள்.
கிறிஸ் கெயில், லோகேஷ் ராகுல், மயாங் அகர்வால்,ஹெட்மேயர் ,சேன் வட்சன், ஸ்டோயினிஸ் என்று அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. இம்முறை IPL இல் இந்த வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய அத்தனை சந்தர்ப்பங்களிலும் EX-RCBian என்று ரசிகர்கள் கிண்டலடிப்பதைக் கண்ணுற்றுரிக்கின்றோம்.
இப்போது இந்த பட்டியலில் ஓர் தவறான “Plyers Trade – வீரர் பற்றிமாற்று” யுக்தியை கையாண்டு பரிதவித்துக் கொண்டிருக்கின்றது பொண்டிங் பயிற்றுவிப்பில் இயங்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி.
ட்ரெண்ட் போல்ட் -2.2 கோடிக்கு டெல்லியால் 2018 ஏலத்தில் டெல்லி அணியால் பெறப்பட்டவர்.
இம்முறை IPL போட்டிகளில் ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரதானமான பந்து வீச்சாளர் போல்ட் என்றால் மிகையாகாது, அதிக IPL விக்கெட்களை இம்முறை கைப்பற்றிய வீரர்களாக ரபாடா, பூம்ரா ஆகியோரை அடுத்து ட்ரெண்ட் போல்ட் மூன்றாமவராக காணப்படுகின்றார்.
இவரும் பூம்ராவும் சேர்ந்து மொத்தமாக 49 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளனர், ( 27 – பூம்ரா ,22 – போல்ட்) அதுவும் Power play ஓவர்களில் விக்கெட் வேட்டை நடத்துவதில் அசகாயசூரனாக ட்ரெண்ட் போல்ட் திகழ்கின்றார்.
இப்படிப்பட்ட போல்டை ஏன் கழற்றிவிடுவதற்கு டெல்லி தீர்மானித்தது என்பதுதான் எனக்கு புரியாத புதிராக இருக்கின்றது. 2018 , 2019 காலங்களில் டெல்லி அணிக்காக IPL ஆடியவர், 2018 இல் 14 போட்டிகளில் 18 விக்கெட்களை அள்ளியவர் , டெல்லிக்காக அந்த சீசனில் அதிக விக்கெட்களை கைப்பற்றியவர் மட்டுமல்லாது, அந்த பருவகாலத்தில் 5 வது அதிக விக்கெட்களை கைப்பற்றியவரும் இவரே.
ஆனால் 2019 இல் 5 போட்டிகளில் மட்டுமே ட்ரெண்ட் போல்ட் ஆடிய நிலையில், கடந்தாண்டு நவம்பரில் வீரர்கள் பற்றிமாற்று திட்டத்தின் அடிப்படையில் டெல்லி அணி இவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றிவிட்டது.
டெல்லி அணி எடுத்த மிகப்பெரிய ஏற்றுக்கொள்ள முடியாத , தவறான முடிவாக இந்த முடிவே காணப்படுகின்றது.
அத்தோடு 4 ஆண்டுகள் டெல்லி அணியில் பயணித்த இன்னுமொருவர் குயிண்டன் டீ கொக், இவர்கள் இருவரும் இன்று டெல்லி அணிக்கு வில்லன்களாக இல்லாமல் இருந்தால் பொண்டிங் நிம்மதி பெருமூச்சு விடலாம் .
ரோஹித சர்மா, தங்களது அணிக்கு போல்டை விட்டுக் கொடுத்தமைக்கு, டெல்லி அணிக்கு பெருமனதோடு நன்றி பாராட்டியிருக்கிறார் என்றால் பாருங்களேன்.
இன்னுமொன்று இருக்கின்றது மாயங் மார்க்கண்டேயை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாற்றியது தவறு என்பதையும் இன்று மும்பைஅணி பாடமெடுத்துக்கொள்ளும், (ராகுல் சஹாருக்கு பதிலாக ஜெயந்த் ஜாதவ் அணிக்குள் வந்திருக்கின்றார்)
எதுவும் இருக்கும் போது தெரிவதில்லை, இல்லாத போதுதான் ஒவ்வொன்றினதும் அருமை பெருமைகள் புரியும் +புரியவைக்கப்படும்
ட்ரெண்ட் போல்ட்டின் கதையும் அப்படிப்பட்டதுதான்
பிற்குறிப்பு- 2019 ICC உலக கிண்ண போட்டிகளில் நியூசிலாந்துக்கு உலக கிண்ணம் கிடைக்காமலிருக்க ஒரு நியூசிலாந்து காரர் ( பென் ஸ்டோக்ஸ்) காரணமானதுபோல், டெல்லிக்கு கிண்ணம் கிடைக்காமல் போக முன்னாள் டெல்லி வீரர்கள் (ட்ரெண்ட் போல்ட் / குயிண்டன் டி கொக்) காரணமாவார்களா என்பதும் சுவராயமானதே
Update -10.11.2020 – 7 PM