தமிழ்நாடு பிரிமீயர் லீக் –
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3 வது முறையாக சாம்பியன்..!
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடர் (TNPL) கிரிக்கெட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது.
இதில் Qualifier 1 போட்டியில் முதல் அணியாக, திருச்சி வாரியர்ஸ் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தகுதிச் சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி திருச்சி வாரியர்ஸ் ஃபைனலுக்கு சென்றது.
இதன்பிறகு, கடந்த ஆக.11 அன்று நடைபெற்ற Eliminator போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றிப் பெற்று கோவையை வெளியேற்றியது.
தொடர்ந்து, கடந்த (ஆக.13) அன்று மற்றொரு qualifier 2 ஆட்டம் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் அணியும், தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதின.
இதில், திண்டுக்கல் அணி வெறும் 103 ரன்கள் மட்டும் எடுக்க, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் அணி.
இந்நிலையில், நேற்று (15) நடைபெற்ற இறுதிப் போட்டியில் திருச்சி ரூபி வாரியர்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் இறுதிப் போட்டியில் மோதின.
இதில் Toss வென்ற திருச்சி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணியில், ஓப்பனிங் வீரர்கள் அணித்தலைவர் கௌசிக் காந்தி மற்றும் ஜெகதீசன் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 58 ரன்களை சேர்த்தனர்.
சிறப்பாக விளையாடி வந்த காந்தி 26 ரன்களுக்கு அவுட்டானார்.இதன் பின்னர் வந்த அனைத்து வீரர்களும் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை.
தனி ஆளாக மாஸ் காட்டிய ஜெகதீசன் 58 பந்துகளில் 90 ரன்களை விளாசினார். இதில் 2 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். இதனால், 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 183 ரன்களை குவித்தது.
இதன் பிறகு 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணியில் தொடக்க வீரர்கள் சந்தோஷ் சிவ் மற்றும் அமித் சாத்விக் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். 12 பந்துகளை சந்தித்த சந்தோஷ் ஷிவ் 16 ரன்களையும், 16 பந்துகளை சந்தித்த அமித் 36 ரன்களையும் சேர்த்தனர்.
அந்த அணி 102 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்தது. இதன் பின் வந்த சரவண குமார் சேப்பாக் அணிக்கு தலைவலியை கொடுத்தார். சிஸ்கர், பவுண்டரி என விளாசிய அவர், 25 பந்துகளில் 45 ரன்களை விளாசினார்.
20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு திருச்சி அணியால் 175 ரன்களே எடுக்க முடிந்தது. சேப்பாக் அணியில் இருந்து மொத்தம் 7 வீரர்கள் பவுலிங் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
சேப்பாக் அணி டிஎன்பிஎல் கோப்பையை வெல்வது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளிலும் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது.
சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பிடித்த திருச்சி அணிக்கு ரூ.30 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.