“நோ-பால்” மழை கொடுத்த ட்விஸ்ட்.. பாவம்யா பும்ரா.. குஜராத் அணிக்கு வெற்றியை தூக்கி கொடுத்த தீபக் சஹர்
ஐபிஎல் தொடரில் மும்பை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை சேர்த்தது. இதன்பின் குஜராத் அணி தரப்பில் சாய் சுதர்சன் – சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் போல்ட் வீசிய 2வது ஓவரிலேயே சாய் சுதர்சன் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து சுப்மன் கில் – பட்லர் கூட்டணி இணைந்து நிதானமாக விளையாடியது. இவர்களின் விக்கெட்டை வீழ்த்துவதற்காக பும்ரா பவர் பிளே ஓவர்களிலேயே அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். ஆனால் இருவருமே நிதானமாக விளையாடிய நிலையில், 6 ஓவர்கள் முடிவில் குஜராத் அணியின் ஸ்கோர் 29 ரன்களாக மட்டுமே இருந்தது. இதனால் மும்பை அணியின் கைகள் ஓங்கி இருந்தது.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா வீசிய 8வது ஓவரில் 18 ரன்கள் சேர்க்கப்பட, திடீரென மும்பை அணி வீரர் கார்பின் பாஸ்ச்-க்கு பதிலாக கன்கசன் வீரராக அஸ்வனி குமார் வந்தார். இதனால் மும்பை அணிக்கு கூடுதல் சாதகம் ஏற்பட்டது. அவர் வீசிய ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, குஜராத் அணி 10 ஓவர்களில் 68 ரன்களை சேர்த்தது.
இந்த நிலையில் அஸ்வனி குமார் வீசிய ஓவரில் பட்லர் 30 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ரதர்ஃபோர்ட் களமிறங்கி அதிரடியாக ரன்களை விளாசி தள்ளினார். வில் ஜாக்ஸ் வீசிய ஒரே ஓவரில் 4, 4, 6 என்று 15 ரன்களை விளாசி தள்ளினார். இதன்பின் அஸ்வனி குமார் பவுலிங்கில் 134 ரன்கள் சேர்க்கப்பட, குஜராத் அணி 14 ஓவர்கள் முடிவில் 107 ரன்களை எடுத்திருந்தது. அப்போது திடீரென மழை குறுக்கிட்டது.
இதன்பின் சுமார் 20 நிமிடங்களுக்கு பின் மீண்டும் ஆட்டம் தொடங்க, பும்ரா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரில் சுப்மன் கில் 43 ரன்களில் ஆட்டமிழக்க, போல்ட் வீசிய அடுத்த ஓவரிலேயே ரதர்ஃபோர்ட் 28 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ஷாரூக் கான் 6 ரன்களிலும், ரஷீத் கான் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 18 ஓவர்களில் குஜராத் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்களை எடுத்தது.
அந்த நேரத்தில் மீண்டும் மழை குறுக்கிட, வீரர்கள் ஓய்வறைக்கு திரும்பினர். இதனால் டிஆர்எஸ் முறைப்படி குஜராத் அணி 4 ரன்கள் பின் தங்கி இருந்தது. அதேபோல் குஜராத் அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டது. 40 நிமிடமாக மழை கொட்டிய நிலையில், ஆட்டம் 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக அறிவிக்கப்பட்டது. இதனால் குஜராத் அணி 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவாகியது.
அப்போது குஜராத் அணி தரப்பில் ராகுல் திவாட்டியா – கோட்ஸி கூட்டணி களம் புகுந்தது. மும்பை அணி தரப்பில் அந்த ஓவரை வீச தீபக் சஹர் வந்தார். அப்போது பும்ரா மற்றும் போல்ட் ஆகியோர் தலா 4 ஓவர்களை வீசி முடித்திருந்தனர். இதன்பின் அந்த ஓவரில் 4, 1, 6, 1+ நோ-பால், 1 என்று அடிக்கப்பட, கடைசி 2 பந்துகளில் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது. அடுத்த பந்தில் கோட்ஸி 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் கடைசி 1 பந்தில் 1 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவாகியது. அப்போது அர்ஷத் கான் களம் புகுந்தார். அந்த பந்தில் ரன் அவுட் செய்ய வாய்ப்பு இருந்தும், அதனை மும்பை வீரர்கள் வீணடித்தனர். இதனால் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இதன் மூலமாக மும்பை அணியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது.