பிரட் லீயின் கருத்தை பொய்யாக்குமா இந்திய கிரிக்கட் அணி ..?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்துவரும் நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கட் அணியினர் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ இந்த போட்டி தொடர்பில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

இந்தப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து  இரு அணிகளும் சரிசம வாய்ப்பில் உள்ளன. என்றாலும் இங்கிலாந்து ஆடுகளத்தன்மை மற்றும் சீதோஷ்ண நிலைமை வேகப்பந்து வீச்சுக்கு உகந்ததாக காணப்படுகின்றது.

ஏறக்குறைய நியூசிலாந்தில் உள்ளது போன்ற நிலைமையே இங்கிலாந்திலும் இந்தப் பருவத்தில் காணப்படுகின்றது, பந்து நன்கு வேகத்துடன் ஸ்விங்கும்(Seam & Swing) ஆகும். இவை எல்லாம் நியூசிலாந்து அணிக்கு பழக்கமானது என்பதால் அவர்களால் தடுமாற்றமின்றி போட்டியை எதிர்கொள்ளமுடியும். இப்படி நோக்கினால் போட்டி நியூசிலாந்துக்கே சாதகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

துடுப்பாட்டத்தை பொறுத்தவரை இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளன. இரு அணிகளிலும் ஸ்விங் பந்துகளை நன்றாக ஆடக்கூடிய வீரர்கள் உள்ளனர். ஆனால் இங்கு ஸ்விங் பந்துவீச்சு தான் முக்கிய பங்கு வகிக்கப் போகிறது. எனவே எந்த அணி சிறப்பாக பந்து வீசுகிறதோ அந்த அணியே கிண்ணத்தைக் கைப்பற்றும்.

நியூசிலாந்தின் வில்லியம்சன் இயல்பான ஒரு நல்ல தலைவர். மிகச்சிறந்த கிரிக்கெட் அறிவு மிக்கவர். பொறுமைசாலி. தேவைப்படும் போது மட்டுமே தாக்குதல் பாணியை கையில் எடுப்பார். ஆனால் இதற்கு நேர் எதிரானவர் இந்திய அணித்தலைவர் விராட்கோலி. எப்போதும் அதீத ஆக்ரோஷமாக செயல்படக் கூடியவர். வெவ்வேறு அணுகுமுறையை கொண்ட இவர்களில் யாருக்கு வெற்றிகிட்டப்போகிறது என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என பிரட் லீ தெரிவித்தார்.

இதேநேரத்தில் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் மைக்கல் ஹோல்டிங் எதிர்மறையான கருத்தை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் 18 ம் திகதி ஆரம்பிக்கவுள்ள ICC டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவே கிண்ணத்தை வெற்றிகொள்ளும் என்று முன்னாள் வீர்ரும்,  கிரிக்கட் வர்ணனையாளருமான மைக்கல் ஹோல்டிங் கருத்துரைத்துள்ளார்.

“வெளிப்படையாக நோக்கினால் மைதானத்தின் தன்மை ஒரு பாத்திரத்தை வகிக்கும். ஆனால் இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதல், நிலைமைகள் வெயிலாக இருந்தாலும் அது அவர்களுக்கு உதவும். அது முழுவதும் வெயிலாக இருந்தால், அவர்கள் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களைக் கூட விளையாட முடியும். அவர்களுக்கு அந்த நன்மை இருக்கிறது.

நிலைமைகள் ஈரமாக இருந்தாலும், இந்தியா ஒரு சுழற்பந்து வீச்சாளரை உள்ளடக்கும் என்று நான் நினைக்கிறேன், அது (ரவிச்சந்திரன்) அஸ்வினாக இருக்கக்கூடும், ஏனெனில் அவர் தனது பேட்டிங்கிலும் சிறப்பாக பங்களிக்க முடியும்.

அங்குள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு திருப்புமுனையை(Turn) அளிக்கிறது, இது இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்றதாக இருக்கும் என்று ஹோல்டிங் தி டெலிகிராப் உடனான ஒரு உரையாடலில் கூறினார்.

விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரின் தலைமைத்துவ திறன்களை மேலும் ஒப்பிட்டுப் பார்த்தால், இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் மிகவும் வேறுபட்டவர்கள் என்றும் கூறினார். கோஹ்லி மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும்போது வில்லியம்சன் அமைதியானவர் என்றும் மைக்கல் ஹோல்டிங் கருத்து தெரிவித்தார்.

இந்தியாவின் பந்துவீச்சுப் பலம் என்பது எந்த சூழலிலும் எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை கொண்டுள்ளதால் டெஸ்ட் சாம்பியன்சிப் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கே அதிகம் என்று ஹோல்டிங் கருத்து வெளியிட்டுள்ளார்.