மகளிர் உலகக் கோப்பை : இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!

12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடை பெற்று வருகிறது.

 

இதன் 2-வது அரை இறுதி ஆட்டம் கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

 

தென்ஆப்பிரிக்கா நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 293 ரன் குவித்தது.

தொடக்க வீராங்கனை டேனி வியாட் சதம் அடித்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ‌ஷப்னம் இஸ்மாயில் 3 விக்கெட்டும், மாரிஹன் காப், மசாபாத கிளாஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 

294 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் தென்ஆப்பிரிக்கா விளையாடியது. 38 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மிக்னான் டு ப்ரீஸ் 30 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

 

இதனால் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் ஏப்ரல் 3-ம் தேதி மோத உள்ளது.

Previous articleவனிந்துவின் அசத்தல் பந்து வீச்சு!
Next articleபிராவோ ஓவரில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை- பதோனி