மீண்டும் நியூசிலாந்துக்கு அதிர்ச்சியளித்த பங்களாதேஸ்- பரபரப்பான போட்டியில் வெற்றி..!
பஙரகளாதேஸ் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணிக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இடம்பெற்று வருகின்றது.
முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணியை வெறுமனே 60 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பங்களாதேஸ், இன்றும் இரண்டாவது போட்டியில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போராட்டத்திற்கு மத்தியில் வெற்றி பெற்றிருக்கிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஸ் அணியின் தலைவர் மஹ்மதுல்லா முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 140 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
நயீம் 39 ஓட்டங்களையும், அணித் தலைவர் மஹ்மதுல்லா ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
141 எனும் இலகுவாக இலக்கோடு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 4 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. அணித்தலைவர் டொம் லதாம் இறுதிவரைக்கும் போராடி ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களை பெற்றாலும் நியூசிலாந்துக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முடியாது போனது.
சுழற்பந்து வீச்சாளர்கள் மஹதி ஹசன் மிராஸ் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
வங்கதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக இலங்கையின் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டதன் பின்னர் பங்களாதேஷ் அணி மிகப் பெரிய ஆதிக்கத்தை கிரிக்கெட் அரங்கில் நிலைநாட்டி வருகிறது.
இறுதியாக நிறைவுக்கு வந்த அவுஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என பங்களாதேஸ் கைப்பற்றியமையும் குறிப்பிடத்தக்கது.