மீண்டும் IPL ல் சின்னத்தல ரெய்னா – கொண்டாட்டம்தான்..!

ஐபிஎல் 2022: புதிய அவதாரத்தில் சுரேஷ் ரெய்னா!

ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா புதிய அவதாரத்தில் களமிறங்குவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக விளங்கும் ரெய்னா, ஒரு காலத்தில் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று வந்தார். இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரெய்னா ஓய்வு பெற்றார். அப்போது அவரது ஃபார்மும் சேர்ந்து அடி வாங்கியது.

இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரெய்னாவை தக்கவைக்கவில்லை. சரி ஏலத்திலாவது ரெய்னா தேர்வு செய்யப்படுவார் என்று பார்த்தால் ரெய்னவை சிஎஸ்கே உள்ளிட்ட அனைத்து அணிகளும் புறக்கணித்துவிட்டன. இதனால் ரெய்னா ஏலத்தில் விலைப்போகவில்லை. இந்த நிலையில் ரெய்னா மீண்டும் விளையாட ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.

குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த ஜேசன் ராய், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக ரெய்னா சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெய்னாவை தேர்வு செய்யாமல் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவரை அந்த அணி தேர்வு செய்தது. இதனால் ரெய்னா ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ரெய்னா புதிய அவதாரம் ஒன்று எடுக்க உள்ளார். ரெய்னாவுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை உணர்ந்த ஸ்டார் நிறுவனம் அவரை வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்ய பெரும் தொகையை வழங்க முன்வந்தது. ரசிகர்களுக்காக அந்த பணியை ஒப்புக்கொண்டுள்ள ரெய்னா, ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களமிறங்குகிறார்.

ரெய்னா மட்டுமல்லாமல் ரவி சாஸ்த்ரியும் கிரிக்கெட் வர்ணனைக்கு ஐபிஎல் மூலம் மீண்டும் திரும்புகிறார். இதனால் ரசிகர்கள் டபுள் சந்தோசத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு சர்வதேச போட்டிக்காக வர்ணனை செய்த தினேஷ் கார்த்திக் இம்முறை ஐபிஎல் தொடரில் விளையாடும் போது ரெய்னாவுக்கு மட்டும் ஏன் இந்த நிலை என்று அவரது ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

#Abdh