வெளிநாட்டு வீரர்கள் விஷயத்தில் ஐபிஎல் அணிகளுக்கு வார்னிங் தந்த பிசிசிஐ.. எல்லோரும் ரெடியா இருங்க!
2025 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பி இருக்கின்றனர். ஆனால் ஐபிஎல் நிர்வாகம் அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் இது குறித்து ஒரு எச்சரிக்கை அனுப்பி இருக்கிறது.
இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும், அதற்கு ஏற்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தி இருக்கிறது. தற்போது அனைத்து வெளிநாட்டு வீரர்களும் தங்கள் நாட்டுக்குச் சென்று விட்ட நிலையில், அவர்களை மீண்டும் ஒரே வாரத்தில் இந்தியாவுக்கு வரவழைப்பது என்பது மிகவும் கடினமான விஷயமாகவே இருக்கும். இது ஐபிஎல் அணிகள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் ஒரு வாரத்தில் மீண்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடியுமா? என்ற கேள்வியும் உள்ளது. தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும் பதற்ற சூழ்நிலை ஒரு வாரத்தில் தணிய வாய்ப்புள்ளது, அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
ஒருவேளை போர் பதற்றம் மேலும் அதிகரித்தால், நிச்சயமாக ஐபிஎல் தொடர் அப்போது நடத்தப்பட வாய்ப்பில்லை. அதே சமயம் தாக்குதல் சம்பவங்கள் குறைந்தால், மீண்டும் ஐபிஎல் தொடர் துவங்கப்படும். அப்போது வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தென்னிந்திய நகரங்களில் மட்டும் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐ ஒரு தற்காலிக திட்டத்தை வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை, ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு ஆகிய 4 நகரங்களுடன் கொல்கத்தாவையும் சேர்த்து 5 நகரங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐ ஒரு தற்காலிக திட்டத்தை வகுத்துள்ளது. அதன்படி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யலாம். வெளிநாட்டு வீரர்கள் அப்போது கவலையின்றி மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாட வருவார்கள் என்பது இந்த திட்டத்தின் பின்னணியாக உள்ளது.
இதில் மற்றொரு சிக்கலும் உள்ளது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஐபிஎல் தொடர் துவங்கவில்லை என்றால், நிச்சயமாக அடுத்த செப்டம்பர் மாதத்தில் தான் மீதமுள்ள 17 ஐபிஎல் போட்டிகளையும் நடத்த முடியும். ஏனெனில், ஜூன் இரண்டாவது வாரத்திலிருந்து இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அந்தத் தொடரை மாற்றி அமைக்க முடியாது. அப்படி செய்தால் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் சர்வதேசப் போட்டி அட்டவணையில் குழப்பம் ஏற்படும்.
இது ஒரு புறம் இருக்க, செப்டம்பர் மாதத்தில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற வேண்டும். ஆனால், தற்போது ஆசிய கோப்பையில் முக்கிய அணிகளாக இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீண்டும் ஆசிய கோப்பையில் ஒன்றாக விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை எனும் நிலை உள்ளது.
மேலும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி இருக்கிறார். எனவே ஆசிய கோப்பையை நடத்துவது சாத்தியமில்லை. அந்த நேரத்தில் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள 17 போட்டிகளை நடத்த முடியும். எனினும் அதில் வெளிநாட்டு வீரர்களின் பங்கேற்பு குழப்பத்தை ஏற்படுத்தும்.
அதனால் முடிந்தவரை அடுத்த ஒரு வாரத்திற்குள் ஐபிஎல் தொடரை மீண்டும் துவங்குவதற்கு பிசிசிஐ முயற்சிகளை எடுக்கும் என கூறப்படுகிறது. அதற்காகவே அனைத்து அணிகளையும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் வெளிநாட்டு வீரர்களை எப்படி உடனே அழைப்பது என்பது சவாலாகவும் அமைந்துள்ளது.