“இத்துடன் முடிந்தது”.. ஜடேஜாவுக்கு அணியில் இடமில்லை.. செக் வைத்த ரோஹித்.. புதிய ஆல்-ரவுண்டர் ரெடி
இந்திய அணியின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா 11 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்த போதும், அவருக்கு போதிய வாய்ப்பு அளிக்காமல் கேப்டன் ரோஹித் சர்மா அவரை ஒதுக்கி வைத்திருப்பது விவாதத்தை கிளப்பி உள்ளது.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் மூன்று குரூப் சுற்று போட்டிகளை நியூயார்க் மைதானத்தில் ஆடியது. அங்கு வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிக விக்கெட் கிடைத்ததால் இந்திய அணி நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை முழுமையாக பயன்படுத்தியது. ஒரே ஒரு சுழற் பந்துவீச்சாளர் மட்டுமே கூடுதலாக தேவை என்ற நிலை இருந்தது.
இந்திய அணியில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருந்தனர். ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் என இருவருமே ஆல் ரவுண்டர்கள் என்ற நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜாவை விடுத்து அக்சர் பட்டேலை பந்து வீச அழைத்தார்.
மூன்று போட்டிகளிலும் அவரே அதிக ஓவர்கள் வீசி விக்கெட்களும் வீழ்த்தி இருந்தார். ஜடேஜாவுக்கு மொத்தமே மூன்று ஓவர்களே பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஒரு பந்து கூட வீசவில்லை.
அடுத்து பேட்டிங்கில் ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஏழு மற்றும் எட்டாவது வரிசையில் தான் இடம்பிடித்து இருந்தார்கள். ஆனால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இடது கை பேட்ஸ்மேன் ஒருவர் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய வேண்டும் என்ற தேவை ஏற்பட்ட போது கேப்டன் ரோஹித் சர்மா அக்சர் பட்டேலை நான்காம் வரிசையில் ஆட அழைத்தார். ரவீந்திர ஜடேஜாவும் இடதுகை பேட்ஸ்மேன் தான். அக்சர் பட்டேலை விட அதிக அனுபவம் வாய்ந்தவர். ஆனாலும், அவரை விடுத்து அக்சர் பட்டேலை தான் நம்பினார் கேப்டன் ரோஹித்.
இதன் மூலம் ரவீந்திர ஜடேஜாவை ரோஹித் ஒதுக்கத் தொடங்கி இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் ரவீந்திர ஜடேஜா டி20 அணியில் இருந்து மொத்தமாக விலக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. தற்போது இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் விளையாட உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்-இல் நடக்க உள்ள இந்த போட்டிகளில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும் என்ற நிலையில் அப்போதாவது ரவீந்திர ஜடேஜாவுக்கு பந்து வீச வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில், சூப்பர் 8 சுற்றின் போது ஒரு தற்போது பிளேயிங் லெவனில் இருக்கும் மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளரில் சிராஜை நீக்கி விட்டு குல்தீப் யாதவை அணியில் சேர்க்க திட்டமிட்டு இருக்கிறது இந்திய அணி.
அப்போது அணியில் ஹர்திக் பாண்டியா உட்பட மூன்று வேகப் பந்துவீச்சாளர்களும், மூன்று சுழற் பந்துவீச்சாளர்களும் இருப்பார்கள். எப்படியும் ஒரு பந்துவீச்சாளருக்கு குறைந்த ஓவர்களே வந்து வீச வாய்ப்பு கிடைக்கும். எனவே, சூப்பர் 8 சுற்றிலும் ஜடேஜாவை “ஒப்புக்கு சப்பானி”யாக கேப்டன் ரோஹித் சர்மா மாற்றி விடுவாரோ என்று சந்தேகம் எழுந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை அவருக்கு இணையான ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல் பிடித்து விட்டார் என்பதே உண்மை.