இந்தியாவுக்கு சாதகமாகும் இறுதிப்போட்டி மைதானம்-கவாஸ்கர் கருத்து…!

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் இறுதி போட்டி எதிர்வரும் 18 ம் திகதி இடம்பெறவுள்ளது.

இங்கிலாந்தின் சீதோஷ்ண நிலைமைகள் இந்தியா போன்றதல்ல, குறிப்பாக போட்டி இடம்பெறவுள்ள சவுத்தம்டன் மைதானம் அதிகம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகத்தை கொடுக்கவல்லது.

Seam & Swing ஆக பந்துகள் வருமாக இருந்தால் இந்தியர்கள் திணறுவார்கள் என்பது பலரதும் கருத்தாக இருக்கின்றது. அதுவும் மப்பும் மந்தாரமான காலநிலை நிலவுகின்றபோது, டியூக் பந்துகள் இந்தியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பது பொதுவான கணிப்பாகும் .

ஆனால் மைதானம் இந்தியர்களுக்கு சாதகமாக மாறுவதாக இந்தியாவின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் ஒருவித கருத்தை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக போட்டியின் வர்ணனையாளர்களுள் ஒருவராக செயல்படவுள்ள கவாஸ்கர், மைதானத்தின் தன்மையை நன்கு அவதானித்த பின்னர் PTI செய்து ஸ்தாபனத்துக்கு அளித்த பேட்டியொன்றில் இந்த விடயங்களை தெரியப்படுத்தினார்.

சவுத்தாம்டன் மைதானத்தில் நல்ல வெயில் தெறிக்கிறது, ஆகவே மைதானம் காய்ந்து, சுழல் பந்துவீச்சுக்கு சாதகத்தை கொடுக்கும் தன்மை அதிகரித்திருக்கிறது. சவுத்தாம்ப்டனின் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரிக்கு மேல் உள்ளது .

ஆகவே இந்தியா 2 சுழல் பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என்றும், அஷ்வின், ஜடேஜா போன்றோர் துடுப்பாட்டத்தில் நல்ல பங்களிப்பை நல்குவார்கள் என்பதனால் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் 2 சுழல் பந்து வீச்சாளர்களுடன் விளையாடி இந்தியா போட்டியை வெல்லும் வாய்ப்புக்கள் அதிகமிருப்பதாக கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.