ஒருத்தரும் அணியில் இருக்க முடியாது.. சீனியர் வீரர்களுக்கு 10 ரூல்ஸ்.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி சமீப காலமாக படுதோல்விகளை சந்தித்த நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ 10 புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளது. இந்த புதிய விதிகளை பின்பற்றாத வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படாது. எனவும் பல்வேறு வகைகளிலும் அவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து முடக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் பின்பற்ற வேண்டிய அந்த 10 புதிய விதிகளை இங்கே பார்க்கலாம்.
1. இந்திய அணி வீரர்கள் யாரும் சுற்றுப்பயணங்களில் போதோ அல்லது ஒரு கிரிக்கெட் தொடரின் போதோ தனிப்பட்ட முறையில் மேலாளர்கள், சமையல் நிபுணர்கள். உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்களை வைத்துக் கொள்ள அனுமதி இல்லை.
2. வீரர்கள் தங்களின் உடைமைகள் மற்றும் உபகரணங்களின் ஒட்டுமொத்த எடையை அணி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேற்பட்ட உடைமைகளையோ, பைகளையோ எடுத்துச் செல்வதற்கான தொகையை அந்த வீரரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
3. அனைத்து வீரர்களும் போட்டிகளுக்கும், பயிற்சிகளுக்கும் அணியினருடன் ஒன்றாகவே பயணம் செய்ய வேண்டும். தங்களின் குடும்பத்தினருடன் தனியாக பயணம் செய்யக் கூடாது. அணியின் ஒற்றுமை இதன் மூலம் பலப்படுத்தப்பட வேண்டும். அணியினருடன் இருக்கும் போது ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும்.
4. இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும். உள்ளூர் போட்டிகளில் ஆடும் வங்கதேசம் வீரர்கள் மட்டுமே தேசிய அணியிலும், பிசிசிஐ ஒப்பந்தத்திலும் இடம் பெற முடியும்.
5. பெங்களூரில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸ்லென்ஸ்-க்கு அனுப்பப்படும் உபகரணங்கள் மற்றும் தனிப்பட்ட பொருட்கள் தொடர்பாக வீரர்கள் அணி நிர்வாகத்துடன் ஒன்று இணைந்து செயல்பட வேண்டும். அதை பின்பற்றவில்லை என்றால் கூடுதல் செலவுக்கு அந்த வீரரே பொறுப்பு ஏற்க வேண்டும்.
6. வீரர்கள் பயிற்சியின் போது பாதியில் வெளியேறக்கூடாது. நிர்ணயிக்கப்பட்ட பயிற்சி நேரம் முடிவடையும் வரை அங்கேயே இருக்க வேண்டும். மேலும், பயிற்சிக்கு செல்லும் போதும், திரும்ப வரும் போதும், அணியினருடன் ஒன்றாக பயணிக்க வேண்டும்.
7. ஒரு தொடரின் இடையே வீரர்கள் தனிப்பட்ட முறையில் படப்பிடிப்பு நடத்துவதோ, விளம்பரங்களுக்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவோ இனி அனுமதி இல்லை.
8. வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் 45 நாட்களுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் இந்திய வீரர்கள் அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளை இரண்டு வார காலத்திற்கு பார்க்க அனுமதி அளிக்கப்படும்.
9. பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்புகள், விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் அனைத்து வீரர்களும் பங்கேற்க வேண்டும்.
10. ஒரு தொடர் அல்லது போட்டி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் முடிவடைந்தாலும், அனைத்து வீரர்களும் அந்தத் தொடரின் ஒட்டுமொத்த காலத்திற்கும் அணியினருடன் இருக்க வேண்டும். அவர்கள் பாதியில் வெளியேறக் கூடாது.