ஒலிம்பிக் 2024 கவுண்டவுன்- இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. களை கட்டும் பாரிஸ்

ஒலிம்பிக் 2024 கவுண்டவுன்- இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. களை கட்டும் பாரிஸ்

2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு தொடர் வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 32 விளையாட்டு போட்டிகளில் 329 பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் 26 நாடுகளை சேர்ந்த 10,714 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்காக பாரிஸ் நகரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் மூன்று நாட்களே உள்ளதால் பாரிஸ் நகரம் களை கட்டத் தொடங்கி இருக்கிறது.

தற்போது வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு கிராமங்களில் வீரர்கள் வந்து சேர தொடங்கி இருக்கிறார்கள். பெரும்பான்மையான வீரர்கள் காலை முதலே தங்களுடைய லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு விளையாட்டு கிராமத்திற்குள் சென்று தங்களுடைய அறைகளின் தங்கி இருக்கிறார்கள்.மேலும் சில வீரர்கள் விளையாட்டு கிராமத்தில் என்னென்ன வசதிகள் இருக்கின்றது என்பதை சுற்றி திரிந்து பார்த்து வருகிறார்கள்.

மேலும் பலர் பாரிஸ் நகரில் உள்ள முக்கிய வீதிகளுக்கு சென்று தங்களுடைய பொழுதை கழித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடத்தும் குழுவின் தலைவரான டோனி செய்தியாளருடன் பேசுகையில், தாங்கள் ஒலிம்பிக் போட்டியை நடத்த முழு அளவில் தயாராகி விட்டதாக கூறியுள்ளார்.

இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், போட்டி நடைபெறும் காலம் முழுவதும் முழு எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் அனைவரும் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எந்த கனவை தான் கண்டேனோ அது தற்போது நினைவாக போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பாரிசில் கடந்த சில மாதங்களாக கன மழை பெய்த நிலையில் தற்போது வானிலையும் நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறது. மேலும் பாரிஸ் நகரில் ஓடும் செயின் ஆறில் தண்ணீர் தரமும் அதிகரித்திருக்கிறது. இந்த ஆற்றின் சுமார் 6000 முதல் 7000 போட்டியாளர்கள் தொடக்க விழாவில் 85 பெரிய படகுகளில் செல்ல இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை 5 லட்சம் மக்கள் கண்டு கழிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 4000 டிக்கெட்டுகள் எஞ்சி இருப்பதாகவும் ரசிகர்கள் உடனடியாக அதனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் குழு கேட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த ஒலிம்பிக் போட்டியின் மூலம் மீண்டும் பிரான்ஸ் ஜொலிக்கும் என்று குழுத் தலைவர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே தீவிர பாதுகாப்பு பணிகள் மற்றும் கட்டுப்பாட்டுகளையும் பிரான்ஸ் அரசு மேற்கொண்டு வருவதால் பாரிஸில் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள், பார்களில் வரும் மக்களின் கூட்டம் குறைந்து இருப்பதாக வணிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனினும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்றால் இது போன்ற நெருக்கடிகள் ஏற்படத்தான் செய்யும் என்றும் போட்டியை நடத்தும் குழு விளக்கம் அளித்துள்ளது.