சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளர் தோனியா? வெளியேறும் ஃபிளமிங்.. தல கட்டுப்பாட்டில் சென்னை டீம்
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து அறிய சில சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு தற்போது 42 வயது ஆகிவிட்டதால் அவர் அடுத்த சீசனில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கடைசியாக ஒரு சீசனில் விளையாட தோனி முடிவெடுத்து இருந்த நிலையில் மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் சிஎஸ்கே அணி தடுமாறிய போதும் தோனி பேட்டிங் செய்ய வரவில்லை. இதனால் அடுத்த சீசன் தோனி 100% வீரராக விளையாட மாட்டார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ஸ்டீபன் பிளமிங், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. இந்த பொறுப்புக்கு பிளமிங் விண்ணப்பித்தால், அவருக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிகிறது. ஏனென்றால் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராகவும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆகவும் பல அனுபவத்தை பெற்றிருக்கிறார்.
இதனால் பிளமிங் பயிற்சியாளராக வர பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் சிஎஸ்கே அணியில் தோனி மென்டராக அடுத்த ஆண்டிலிருந்து செயல்பட தொடங்கினால், பிளமிங்கின் முக்கியத்துவம் குறைந்துவிடும். இதனால்தான் பிளம்மிங் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வர போகிறார் என்ற தகவல் கசிந்திருக்கிறது.
இதன் மூலம் அடுத்த சீசனில் இருந்து சிஎஸ்கே அணி தோனியின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று தெரிகிறது. தோனி வீரராக இல்லை என்றாலும் அணியின் பயிற்சியாளராக வீரர்களை வழி நடத்தி வெற்றி பெற உதவுவார் என்று கூறப்படுகிறது. பிளமிங் சிஎஸ்கே அணியில் இருந்து நகர்வதன் மூலம் தோனி தான் அடுத்த பயிற்சியாளர் என்பது 100 சதவீதம் உறுதியாகி இருக்கிறது.