சிஎஸ்கே பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்கள்.. ராகுல், விஜய்-க்கு டாட்டா பைபை சொல்லப் போகும் தோனி

சிஎஸ்கே பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்கள்.. ராகுல், விஜய்-க்கு டாட்டா பைபை சொல்லப் போகும் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் விரைவில் அதிரடியாக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு புதிய வீரர்களுக்கு பேட்டிங் வரிசையில் தோனி இடம் அளிக்கப் போவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு புதிய வீரர்கள் மாற்று வீரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். 2025 ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, 17 வயதான மும்பையைச் சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் மத்ரே அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ஆயுஷ் மத்ரே ரஞ்சி டிராபி மற்றும் லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்திருந்தாலும், இதுவரை டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாதவர். இருப்பினும், அவரை ஏற்கனவே வலைப் பயிற்சிக்கு அழைத்து சோதித்ததாகவும், அதில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்ததாகவும் சிஎஸ்கே வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து, சிஎஸ்கே அணியில் குர்ஜப்நீத் சிங் காயம் காரணமாக விலகியதால், அவருக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் ‘பேபி ஏபி’ என அழைக்கப்படும் டெவால்ட் பிரெவிஸ் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். பிரெவிஸ் அதிரடியாக ஆடக் கூடியவர் என்பதால், சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரை அவசரமாகத் தேர்வு செய்துள்ளது.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் சற்றே பலவீனமாகக் காணப்படுகிறது. சிவம் துபே அதிரடியாக ஆடக்கூடியவர் என்றாலும், 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

மிடில் ஆர்டரின் அதிரடித் திறனை அதிகரிக்கும் நோக்கிலேயே டெவால்ட் பிரெவிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, ஆயுஷ் மத்ரே மற்றும் டெவால்ட் பிரெவிஸ் ஆகிய இருவரும் பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இவர்கள் இருவரையும் அணியில் சேர்ப்பதென்றால், தற்போதுள்ள வீரர்களில் இருவரை நீக்க வேண்டியிருக்கும். அந்த இரண்டு வீரர்கள் ராகுல் திரிபாதி மற்றும் விஜய் சங்கர் ஆக இருக்கலாம் எனத் தெரிகிறது. அவர்கள் இருவரும் இதுவரை சொதப்பலான ஆட்டத்தை தான் ஆடி உள்ளனர். இவர்கள் இருவரும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான கடைசிப் போட்டியில் விளையாடியிருந்தனர்.

அப்போட்டியின் முடிவில் பேசிய எம்.எஸ். தோனி, அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். எனவே, பந்துவீச்சாளர்களை மாற்றுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும், பேட்டிங்கை பலப்படுத்த ராகுல் திரிபாதி மற்றும் விஜய் சங்கருக்குப் பதிலாக ஆயுஷ் மத்ரே மற்றும் டெவால்ட் பிரெவிஸ் சேர்க்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே உத்தேச 12 பேர் கொண்ட அணி (இம்பாக்ட் வீரர் உட்பட):
சிஎஸ்கே வட்டாரத் தகவல்களின்படி, புதிய மாற்றங்களுக்குப் பிறகு, இம்பாக்ட் வீரரையும் சேர்த்து, சிஎஸ்கே அணியின் 12 வீரர்கள் கொண்ட பட்டியல் பின்வருமாறு அமையலாம்:

ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மத்ரே, சிவம் துபே, டெவால்ட் பிரெவிஸ், ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி, ஜேமி ஓவர்டன், அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பதிரானா.

Previous articleகாவ்யா மாறன் டீம் உருப்படியா ஆடாத காரணமே இதுதான்.. மிடில் ஆர்டர் சரியில்லை – மைக்கேல் கிளார்க்
Next articleசச்சின் மகத்தான சாதனையை முறியடித்த ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்