பதான்கோட்டில் ஏவுகணை.. பதறி அடித்து பஞ்சாப் கிங்ஸ் பேருந்தில் ஏறிய டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்கள்

பதான்கோட்டில் ஏவுகணை.. பதறி அடித்து பஞ்சாப் கிங்ஸ் பேருந்தில் ஏறிய டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்கள்

தரம்சாலாவில் நடைபெற்று வந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையேயான போட்டி பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், அங்கு என்ன நடந்தது என அந்தப் போட்டியில் பங்கேற்ற ஒரு வீரர் விவரித்திருக்கிறார்.

தரம்சாலா ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்திருந்தாலும், அங்கிருந்து ஜம்மு காஷ்மீர் சில நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு, ஜம்மு மற்றும் பதான்கோட் ஆகிய நகரங்களில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. அதை இந்திய ராணுவம் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது.

எனினும், அருகே இருந்த நகரமான தரம்சாலாவில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது, குறிப்பாக ஐபிஎல் போட்டியில் எந்தச் சம்பவங்களும் அரங்கேறி விடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்தப் போட்டி நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தரம்சாலா விமான நிலையம் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இந்தப் போட்டி 10.1 ஓவர் வீசப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. மைதானத்தில் இருந்த மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து வீரர்களும், ரசிகர்களும் வெளியேற்றப்பட்டனர்.

அதன் பின் என்ன நடந்தது என அந்த வீரர் விவரித்தார். இரவு 9:35 மணிக்கு போட்டி நிறுத்தப்பட்டது. தரம்சாலாவில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பதான்கோட்டில் தாக்குதல் நடைபெற்றது. அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

“அப்போது எங்களிடம் பதான்கோட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சொன்னார்கள். அனைவரும் ஹோட்டலுக்கு உடனடியாகத் திரும்புமாறு எங்களுக்கு அறிவுறுத்தினார்கள். அங்கு பதற்றம் நிலவியது. டெல்லி கேப்பிடல்ஸ் வீரர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேருந்திலும், பஞ்சாப் கிங்ஸ் வீரர்கள் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேருந்திலும் மாறி மாறி அமர்ந்தனர்” என்று அந்த வீரர் நடந்த சம்பவத்தை விவரித்தார்.

அதன் பின்னர் இன்று, அந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்க வந்திருந்த வீரர்கள், ஒளிபரப்பு குழுவினர், வர்ணனையாளர்கள் உட்பட சுமார் 300 பேரை ஐபிஎல் நிர்வாகம் வந்தே பாரத் ரயில் மூலம் பாதுகாப்பாக டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது. தரம்சாலாவில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டு இருந்த நிலையில், அங்கிருந்து ஐபிஎல்-இல் பங்கேற்க வந்த 300 பேரும் வந்தே பாரத் ரயில் மூலம் டெல்லிக்கு பாதுகாப்பாக அனுப்பப்பட்டனர்.

அனைத்து விதமான வசதிகளோடு இருக்கும் என்பதோடு, வேகமாக செல்லக்கூடியது என்பதால் வந்தே பாரத் ரயில் மூலம் ஐபிஎல் நிர்வாகம் வீரர்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து 2025 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 58 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. மீதமுள்ள 16 போட்டிகள் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகள் எப்போது நடைபெறும்? என்பது குறித்து பிசிசிஐ எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.

Previous articleதோனிக்கு Farewell கிடையாதா? பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்த ரசிகர்கள்
Next articleவிராட் ஓய்வை அறிவித்தார்..!