மகளிர் உலகக்கோப்பை 2022: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

மகளிர் உலகக்கோப்பை 2022: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

மகளிர் உலகக்கோப்பை: இந்திய அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இத்தொடரின் முதல் வெற்றியைப் பெற்றது.

நியூசிலாந்தில் நடபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து மகளீர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது

இங்கிலாந்து வீராங்கனைகளின் அபாரமான பந்துவீச்சால் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. 16.4 ஓவர்களில் 61 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்தது. யாஷிகா பாட்டீல் 8 ரன்னிலும், கேப்டன் மிதாலி ராஜ் 1 ரன்னிலும், தீப்தி சர்மா ரன் எதுவும் எடுக்காமலும், கடந்த ஆட்டத்தில் சதம் அடித்த ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்னிலும், ஸ்நே ரானா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.

நன்றாக விளையாடி வந்த தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 35 ரன்னில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 36.2 ஓவர்களில் 134 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் சார்லி டீன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 135 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 ரன்களைச் சேர்ப்பதற்குள்ளாகவே டாமி பியூமன், டேனிய வையட் ஆகியோரது விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹீதர் நைட் – நடாலி ஸ்கைவர் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நடாலி ஸ்கைவர் 45 ரன்னில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஹீதர் நைட் அரைசதம் கடந்து அசத்தினார்.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 31.2 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

#Abdh