10 சீசன்களில் ரன் அடிக்காத ரோஹித் சர்மா.. ஹிட்மேன் ஓய்வை அறிவிப்பது நல்லது.. விளாசிய சேவாக்!
மும்பை கிரிக்கெட் ஜாம்பவான் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதற்கான நேரத்தை கடந்தும் விளையாடி வருவதாக முன்னாள் வீரர் சேவாக் விமர்சித்துள்ளார். கடந்த 10 சீசன்களில் ஒரேயொரு முறை மட்டுமே 400 ரன்களை ரோஹித் சர்மா விளாசி இருப்பதாக கூறிய ரோஹித் சர்மா, இனி வரும் போட்டிகளிலாவது கொஞ்சம் அணுகுமுறையை மாற்றி கொண்டு ரன்களை சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் மும்பை ஜாம்பவான் ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக தொடங்கிய ரோஹித் சர்மா, 3 சிக்சர்களை விளாசியதால் பெரிய ஸ்கோரை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் 16 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
இந்த சீசனில் ரோஹித் சர்மா இதுவரை ஆடிய 6 இன்னிங்ஸ்களில் 82 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். கடைசியாக ஆடிய 22 இன்னிங்ஸ்களில் 6 முறை மட்டுமே ரோஹித் சர்மா 20 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார். மீதமுள்ள 16 இன்னிங்ஸ்களிலும் ரோஹித் சர்மாவின் பேட்டில் இருந்து வந்த ரன்கள் 20 ரன்களை தாண்டவில்லை. இதனால் அவரின் ரசிகர்களும் சோகத்தில் இருக்கின்றனர்.
இதனால் இந்த சீசனோடு ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சேவாக் பேசுகையில், ரோஹித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் போது ரோஹித் சர்மா விலகுவது நல்லது. ஏனென்றால் வரும் காலங்களில் ரசிகர்களே, போதும்.. ஓய்வு பெறுங்கள் என்று கூற தொடங்கிவிடுவார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் ரோஹித் சர்மா ஒரேயொரு முறை மட்டுமே 400 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார். அவர் ஒவ்வொரு சீசனில் 500 முதல் 700 ரன்களை அடிக்க வேண்டும் என்று நினைக்கும் வீரரும் அல்ல. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் போது, பவர் பிளேவில் அட்டாக் செய்து ரன்களை குவிக்க வேண்டும் என்று ஆடினார். அணிக்காக தியாகம் செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ரன்களை சேர்க்கவில்லை என்றால், அவரின் இத்தனை நாட்கள் கட்டி காத்த லெகசி பாதிப்படையும்.
யாராவது ரோஹித் சர்மாவிடம் சென்று முதல் 10 பந்துகளை பொறுமையாக விளையாடுமாறு கூற வேண்டும். ஏதாவது ஒரு இன்னிங்ஸில் ரோஹித் சர்மா புல் ஷாட் விளையாட கூடாது என்று களமிறங்க வேண்டும். நான் விளையாடும் போது, ஃபார்மில் இல்லாத போது சச்சின், ராகுல் டிராவிட், கங்குலி உள்ளிட்டோர் கொஞ்சம் நிதானமாக விளையாடுமாறு கூறியுள்ளனர். அதனை ரோஹித் சர்மாவுக்கு யாராவது சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.