“500 ரன்கள்” ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை.. சாய் சுதர்சன், சுப்மன் கில், பட்லர் படைத்த மிரட்டல் சாதனை
ஐபிஎல் தொடரில் வரலாற்றில் முதல்முறையாக ஒரே அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் 500 ரன்களுக்கு மேல் விளாசி புதிய சாதனை படைத்துள்ளனர். குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில், தொடக்க வீரர் சாய் சுதர்சன் மற்றும் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஆகிய 3 வீரர்களும் 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளதால், இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய குஜராத் அணி 18 ஓவர்களில் 132 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென மழை குறுக்கிட்டது.
இதன்பின் மழை நின்ற நிலையில், குஜராத் அணிக்கு 6 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று டிஆர்எஸ் விதிகளின்படி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதனை கடைசி பந்தில் குஜராத் அணி அபார வெற்றியை பெற்றது. இதன் காரணமாக குஜராத் அணி புள்ளிப் பட்டியலில் 16 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
அதேபோல் இன்னும் 3 போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட குஜராத் அணியால் எளிதாக டாப் 2 இடங்களுக்குள் நிறைவு செய்ய முடியும் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் குஜராத் அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் இணைந்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளனர். இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில், எந்த அணியைச் சேர்ந்த 3 வீரர்களும் 500 ரன்களை விளாசியதே கிடையாது.
ஆனால் இந்த சீசனில் குஜராத் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் 5 அரைசதம் உட்பட 509 ரன்களையும், கேப்டன் சுப்மன் கில் 5 அரைசதங்கள் உட்பட 508 ரன்களையும், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 5 அரைசதங்கள் உட்பட 500 ரன்களையும் விளாசி இருக்கின்றனர். இந்த சீசனில் குஜராத் அணி சேர்த்துள்ள மொத்த ரன்களில் 76 சதவிகித ரன்கள் இவர்கள் மூவரால் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மட்டும்தான் இந்த 3 பேட்ஸ்மேன்களும் அரைசதம் அடிக்காமல் 15 ஓவர்களுக்குள் முன் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கின்றனர். இதுவரை ஒரு அணியிலும் அதிகபட்சமாக 2 வீரர்கள் 500 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கின்றனர். ஆனால் 3 வீரர்கள் 500 ரன்களுக்கு சேர்த்திருப்பது முதல்முறை என்பதால் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.