2 பந்துகளில் 2 விக்கெட்டுகள்.. கைவிட்ட சிவம் துபே.. இந்தியாவுக்கு அதிர்ச்சி.. இலங்கை சம்பவம்!

2 பந்துகளில் 2 விக்கெட்டுகள்.. கைவிட்ட சிவம் துபே.. இந்தியாவுக்கு அதிர்ச்சி.. இலங்கை சம்பவம்!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்களை சேர்த்தது. 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, இளம் வீரர் வெல்லாலகே சிறப்பாக விளையாடி 65 பந்துகளில் 67 ரன்களை விளாசினார்.

அதேபோல் தொடக்க வீரர் நிசாங்கா 56 ரன்களை சேர்த்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் 231 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணிக்காக ரோஹித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. வழக்கம் போல் ரோஹித் சர்மா பவுண்டரியும், சிக்சருமாய் பொளந்து கட்ட, இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 33 பந்துகளில் அரைசதத்தை விளாசினார்.

முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், சுப்மன் கில் 35 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வெல்லாலகே பவுலிங்கில் ரோஹித் சர்மாவும் 58 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் இலங்கை அணியின் கைகள் ஓங்கியது. நேரம் செல்ல செல்ல பிட்ச் ஸ்லோவாக மாறியதோடு, ஸ்பின்னர்களுக்கு அதிக உதவியை அளித்தது. பின்னர் திடீரென களமிறக்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் விராட் கோலி – ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி நிதானமான ரன்களை சேர்த்தது.

இதனால் 23 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 130 ரன்களாக இருந்தது. அப்போது ஹசரங்கா பவுலிங்கில் விராட் கோலி 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே ஸ்ரேயாஸ் ஐயர் 23 ரன்களில் போல்டாகினார். 5 விக்கெட்டுகள் சரிந்தாலும், கேஎல் ராகுல் – அக்சர் படேல் இணை பார்ட்னர்ஷிப் அமைத்தது. 6வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கேஎல் ராகுல் 31 ரன்களில் வெளியேற, பின்னர் அக்சர் படேலும் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி 40.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை சேர்த்திருந்தது. இதன்பின் சிவம் துபே – குல்தீப் யாதவ் கூட்டணி களத்தில் இணைந்தது. கடைசி 6 ஓவர்களில் இந்திய அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது ஹசரங்கா ஸ்பின்னில் ஏமாந்த குல்தீப் யாதவ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சிராஜ் சில ரன்களை எடுக்க, மறுமுனையில் சிவம் துபே அபாரமாக ஒரு சிக்சரை விளாசினார். இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

ஹசரங்கா வீசிய 47வது ஓவரிலேயே 10 ரன்கள் சேர்க்கப்பட்டதால், 5 ரன்கள் மட்டுமே இந்திய வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது அசலங்கா வீசிய ஓவரில் பவுண்டரி அடித்த சிவம் துபே, ஸ்கோரை சமன் செய்தார். ஆனால் அடுத்த பந்திலேயே சிவம் துபே 25 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் பரபரப்பானது. பின்னர் வந்த அர்ஷ்தீப் சிங் அடுத்த பந்திலேயே ஆட்டமிழக்க, ஆட்டம் சமனில் முடிந்தது. 47.5 ஓவர்களில் 230 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் கேப்டன் அசலங்கா, ஹசரங்கா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.