எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் திட்டமிடப்பட்டிருக்கும் T20 உலக கிண்ணத்தில் இலங்கை அணிக்காக மாலிங்க விளையாடுவாரா எனும் தகவலை இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை தேர்வாளர் பிரமோதய விக்கிரமசிங்க இன்று வெளியிட்டார்.
“நான் மாலிங்கவை சந்தித்து பேசினேன். இந்த ஆண்டு T20 உலகக் விளையாடுவீர்களா என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் எனக்கு ஒன்றரை ஆண்டுகளாக போட்டி கிரிக்கெட்(Competitive cricket) எதிலும் விளையாடியதில்லை என்று பதிலளித்தார்.
எங்கள் தேர்வுக் கொள்கைகளை நான் பின்னர் அவருக்கு விளக்கினேன். தேர்வுக்கு தகுதி பெற வீரர்கள் 2 கி.மீ ஓட்டத்தை கடக்க வேண்டிய காலஅளவு குறித்து எடுத்துரைத்தேன்.
“தேசிய தேர்வுக்கு தகுதி பெற ஒருவர் உள்நாட்டு கிரிக்கெட்டிலும்(Domestic cricket) விளையாட வேண்டும் என்றும் நான் அவரிடம் சொன்னேன். மாலிங்கா நாங்கள் கோரும் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தால், அந்த நேரத்தில் அவரை தேர்வு செய்வதற்கு தேர்வுக்குழு தயங்காது என்பதையும் தெரியப்படுத்தினேன்.
அத்தோடு இளைய வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்கான எங்கள் கொள்கைகளைப் பாராட்டினார், அதனையே தொடருமாறும் அவர் என்னைக் கேட்டுக்கொண்டார். இருப்பினும், மலிங்கா வரவிருக்கும் T20 உலகக் கிண்ண தொடரில் விளையாட விரும்புகிறாரா இல்லையா என்பது குறித்து தெளிவான பதிலை அளிக்கவில்லை என்று தலைமை தேர்வாளர் பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வருகின்ற ஆகஸ்ட் மாதம் மாலிங்க 38 வயதை அடைகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.